நாளை (15.08.2018 ) கருட பஞ்சமி! பகவான் எத்தனை அவதாரம் எடுத்தாலும் அதில் கருடனும் இருப்பார் என்கிறது புராணம். இப்படி எந்நேரமும் ஸ்ரீமந் நாராயணனை விட்டு பிரியாத கருடனை நாம் வணங்கினால் நிச்சயம் கருடனின் அருளாசி கிடைக்கும். முதலையின் வாயில் சிக்கிகொண்ட யானை, ’ஆதிமூலமே’ என்ற அலறிய போது, பெருமாள் அந்த யானையை காப்பாற்ற நினைத்தவுடன் அவரின் மனஓட்டத்தை புரிந்துக்கொண்டு பகவானை சுமந்து வேகமாக வந்து யானையை காப்பாற்ற உதவினார் கருடபகவான். அதனால்தான் பெருமாளை வணங்கும்போது அவருடைய வாகனமான கருடனுக்கும் விளக்கேற்றி வாசனை மலர்களை சமர்பித்து வணங்கினால் பெருமாளின் ஆசியும் கருடபகவானின் அனுகிரகமும் கிடைக்கும். நாளை (15.08.2018) நாக பஞ்சமி! பல வடஇந்தியர்கள் தங்கள் வீட்டில் நாகத்தின் படத்தை வைத்து தினமும் பூஜை செய்கிறார்கள். நாகம் ஆசி வழங்கினால்தான் யோகம் ஏற்படும் என்று ஆணிதரமாக நம்புகிறார்கள். இது உண்மையும் கூட. அத்துடன் நாக பஞ்சமி அல்லது நாகசதுர்த்தி அன்று நாகத்திற்கு பூஜைகள் செய்தால் நிச்சயம் நல்ல பலன் கிடைக்கும் – தோஷமும் நீங்கும். நாகவழிபாடு என்பது நம் இந்தியா முழுவதும் விசேஷம். கடவுளின் உருவம் தெரியாத காலத்திலேயே நாகம்தான் நம் தெய்வமாக இருந்தது. அதனால்தான் பிறகு நமது தெய்வங்களுடன் நாகமும் முக்கிய இடம் பெற்றது. அதனால் நாக பஞ்சமி அன்று உங்கள் வீட்டின் அருகே இருக்கும் ஆலயத்திற்கு சென்று நாகசிலைக்கு அபிஷேகம் செய்து மஞ்சள்-குங்குமம் வைத்து பூஜை செய்யுது வணங்கினால் தடைப்படும் காரியங்கள் எல்லாம் தடையில்லாமல் நடக்கும். நாகதோஷம், காலசர்ப்பதோஷம் எதுவானாலும் அவை நீங்கி, உன்னதமான வாழ்க்கை அமையும்

Thursday, 21 August 2014

விஸ்வாமித்திரர் வாழ்க்கை வரலாறு

விஸ்வாமித்திரர் வழக்கை வரலாறு






க்ஷத்திரிய குல அரசனான காதியின் மகள் சத்யவதிக்கும், கௌசிக குலத்தைச் சார்ந்த பிராமணர் ரிஷிகா என்பவருக்கும் பிறந்தவர் விஸ்வாமித்திரர் என்கிறது விஷ்ணு புராணம். சத்யவதி கர்ப்பவதியாக இருக்கும்போது, பிராமணனைப் போன்ற குணமுடைய குழந்தை பிறக்க வேண்டும் என்று விரும்பினார் 
ரிஷிகா. ஆனால், சத்யவதியின் மனதில், க்ஷத்திரியனைப் போல் 
வீரமுள்ள குழந்தைதான் பிறக்க வேண்டும் 
என்ற எண்ணம் இருந்தது. முதல் குழந்தையான விஸ்வாமித்திரர் தாயின் க்ஷத்திரிய குல சாயலாகவும், பிராமண குல பண்புடனும் பிறந்தார். 
அவர் தம்பியான ஜமதக்னி போர்க்குணம் நிறைந்த பிராமணனாகவும் க்ஷத்திரியர்களை அழிக்கவும் மனம் கொண்டிருந்தார். விஸ்வாமித்ர முனிவர் க்ஷத்திரிய குலத்தைச் சார்ந்தவராக இருந்தபடியால், அவரிடம் கோபம், வேகம், வேட்கை ஆகியவை இயற்கையாகவே இருந்தன. 
ராஜ குலத்தைச் சார்ந்ததால், ரிஷி எல்லாவற்றையும் தன் அதிகாரத்தால் பெற வேண்டும் என்ற ஆணவம் அவரிடம் நிறைந்திருந்தது. 
படைப்புக் கடவுளான பிரம்மாவின் புத்திரரான வசிஷ்ட மகரிஷியைப் போல் தானும் படைப்பாற்றல் பெற வேண்டும் என்பதற்காக உள்ளார்ந்த எண்ணம் கொள்ளாமல், சுயநலத் தேவைகளுக்காக படைப்புச் சக்தியைப் பெற பெரும் முயற்சி கொண்டார். 
அதில் தோல்வியையும் கண்டார். இவர் அஷ்டதிக் பாலகர்களைப் பார்த்தாலும், அவர்களைப் போல் தனக்கே அத்துணை சக்திகளும் வேண்டும் என்றே நினைப்பார்.
விஸ்வாமித்திரருக்கு, தான் வசிஷ்டரைப் போல் பிரம்மரிஷியாக வேண்டும் என்ற எண்ணம் மனதில் இருந்தது. இத்துடன் வசிஷ்ட மகரிஷியே தன்னை பிரம்மரிஷியாக ஏற்றுக்கொள்ள வேண்டும் என்ற வெறியும் அவர் மனதில் இருந்தது. அவரின் க்ஷத்திரிய குல அரச குணத்தால், அவரின் தவ வலிமைகள் எல்லாம் அவரின் சுய ஆசாபாசங்களுக்காக மட்டுமே பயன்படுத்தப்பட்டன. விஸ்வாமித்திரை சிறந்த பிரம்மகுல ரிஷியாக மாற்ற, இந்திரனுக்கு ஆணையிட்டார் பிரம்மா. இந்திரன் தன் சபையில் உள்ள சிறந்த அழகியும், அறிவில் சிறந்தவளுமான மேனகையை முதலில் அனுப்பி, அவர் புத்தி எனும் இரண்டாம் நிலையிலிருந்து பெண் சக்தியின் ஆக்ஞா சக்கரத்தை விஸ்வாமித்திரருக்கு வழங்க முயற்சித்தார். விஸ்வாமித்திரர் மேனகையின் ஆக்ஞை சக்கரத்தை பந்தத்தில் ஏற்றுக்கொள்ளத் தவறியதுடன், கீழ்நிலையான காமத்தில் லயித்துவிட்டார்.
தன் சுய அறிவினால் எல்லாவற்றையும் பெற்றுவிட முடியும் என்று நினைத்த விஸ்வாமித்திரருக்கு, பிரம்மா பாடம் புகட்ட நினைத்தார். விஸ்வாமித்திரர் முன்னால் தோன்றி, அவர் பிரம்ம ரிஷிதான் என்று கூறியவுடன், அதை பிரம்ம ரிஷியான வசிஷ்டர் தன் வாயால் சொல்ல வேண்டும் என்று கூறினார். வசிஷ்டர் அப்படித் தன்னை ஏற்றுக் கொள்வாரா மாட்டாரா என்கிற கோபத்துடனும் ஆணவத்துடனும் ஒரு கட்டத்தில் அவரைக் கொல்லவும் துணிந்தார். வசிஷ்ட முனிவரின் மனைவி அருந்ததி இதை அறிந்து, தன் கணவரிடம் விஸ்வாமித்திரர் பிரம்மரிஷிதான் என்று அவர் தம் வாயால் கூறி விடும்படி ஆலோசனை வழங்கினார். வசிஷ்டரின் ஆக்ஞை சக்கரம் அருந்ததியால் தூண்டி விடப்பட்டது. வசிஷ்ட மகரிஷியும் தன் திருவுளம் திறந்து அருந்ததியே! நான் விஸ்வாமித்திரரின் பலத்தினாலும் பராக்கிரமத்தினாலும் பயந்துவிடவில்லை. அவர் மேல் கொண்ட பேரன்பினாலேயே, அவரை பிரம்ம ரிஷி என்று என் மனமார ஏற்றுக்கொள்வதுடன் எல்லோர் முன்னிலையிலும் இதைக் கூறுவேன் என்றார்.
வசிஷ்ட முனிவரின் ஆசிரமத்தின் வெளியில் அவரைக் கொல்வதற்காகக் காத்துக் கொண்டிருந்த விஸ்வாமித்திரரின் செவிகளில் வசிஷ்டர் கூறிய வார்த்தைகள் விழுந்தன. அவை விஸ்வாமித்திரரின் ஆணவம், அகந்தை, கோபம் எனும் க்ஷத்திரிய குணங்களைச் சுக்குநூறாக உடைத்தன. தன்மீது அன்பு கொண்ட வசிஷ்டரைக் கொல்ல நினைத்ததை எண்ணி, மனம் பதைத்து கண்ணீர் மல்க தன் பாவங்களை வசிஷ்டரின் பாதங்களில் சமர்ப்பித்துக் கதறினார். விஸ்வாமித்திரரை வாரி அணைத்துக் கொண்ட வசிஷ்டர், விஸ்வாமித்திரரின் ஆக்ஞா சக்கரம் விழிப்பு உணர்வு பெற, புருவ மத்தியில் தொட்டு ஆசிர்வதித்து பிரம்மரிஷி என்று அழைத்து வாழ்த்தினார். தன் ஆக்ஞை சக்கரம் செயல்படத் தூண்டுகோலாக இருந்த அருந்ததியையும் விஸ்வாமித்திரர் வணங்கி விடைபெற்றார். பிரம்மரிஷி என்ற பட்டம், அவருக்கு பெருமையைத் தராமல் பொறுமையைத் தந்து விழிப்பு உணர்வையும் தந்தது. ஆண் குலத்திற்கே விழிப்பு உணர்வு எனும் மூன்றாம் கண்ணைக் கொடுத்த சக்தியை, தன் புருவ மத்தியில் ஐந்து முகமுடைய காயத்ரிதேவியாக விஸ்வாமித்திரர் கண்டுணர்ந்தார். காயத்ரிதேவியின் தரிசனம், பஞ்சமா பாவத்திலிருந்து அவரை விடுதலையாக்கியதுடன், அவரின் உடலில் பஞ்ச வாயுக்களையும் சரிசெய்து நிலைப்படுத்தியதுடன், பஞ்சபூதங்களுடன் இணைந்து வாழும் வாழ்வையும் விஸ்வாமித்திரருக்குக் கொடுத்தது.
விஸ்வாமித்திரரின் ஆக்ஞா சக்கரத்தின் தூண்டுதலை வசிஷ்டர் உணரச் செய்ததால், உணர்வு எனும் உன்னதமான மூன்றாம் நிலைக்கு விஸ்வாமித்ர முனிவர் சென்றார். உணர்வு நிலையில் பெண்மையின் தன்மையை அவர் உணரச் செய்ததுடன், அதன் வல்லமையை அனைவரும் உணரும் வண்ணமாக காயத்ரி மந்திரத்தைப் போல் சிறந்த மந்திரம் இல்லை என்று சொல்லும்படியாக தன் உணர்வால் உருவாக்கினார். கிருஷ்ண பரமாத்மாவும், மந்திரங்களில் நான் காயத்ரியாக இருக்கின்றேன் என்று கீதையில் கூறுகின்றார். பாவங்களை நீக்கி, சமநிலைப்படுத்தி, சந்தோஷத்தைக் கொடுத்து சக்தியைப் பெருக்கும் மிகவும் சக்திவாய்ந்த காயத்ரி மந்திரம் எனும் மந்திரத்தை விஸ்வாமித்திரரே இந்த உலகிற்குக் கொடுத்தார் என்று ரிக் வேதம் கூறுகின்றது. புத்தியால் எல்லாவற்றையும் சாதித்துவிட முடியும் என்று மூர்க்க குணத்துடன், பிடிவாதமாக, வெறித்தனமான தவ வலிமையால் எல்லாவற்றையும் பெற்றுவிட முடியும் என்ற மமதையில் வாழ்ந்த விஸ்வாமித்திரர், பெண் சக்தியால் கொடுக்கப்பட்ட ஆக்ஞை சக்கரம் விழிப்பு உணர்வு பெற்று உணர்வு நிலைக்குத் திரும்ப அருந்ததி காரணமாக இருந்தார். பெண்மையின் தன்மையை முழுவதுமாக உணர்ந்து காயத்ரிதேவியின் தரிசனம் பெற்றார். ரிக்வேதத்தின் 5-ஆம் பகுதியை விஸ்வாமித்திரர்தான் இயற்றினார்.
விஸ்வாமித்திரரின் வாழ்க்கை, முழுமையாக மாற்றப்பட்டுவிட்டது. மனிதனின் கடமைகள் பற்றிய முழு உண்மைகளை எழுதியதுடன், லஞ்சம் கொடுப்பது, லஞ்சம் பெறுவதின் சாபங்களையும் குறித்து எழுதினார் என்று, மஹாபாரதம் அனுசாசன பர்வம் 93-ஆம் அதிகாரம் 43-ஆம் பதத்தில் கூறப்பட்டுள்ளது. ராமாயணத்தில் ராமபிரானுக்கும், லட்சுமணருக்கும், அதர்மத்துக்கு எதிராக எப்படி அஸ்திரங்களைப் பயன்படுத்துவது என்று போதித்து, 47 வகையான அஸ்திரங்களை எப்படிப் பிரயோகிப்பது என்றும் விஸ்வாமித்திரர் போதித்தார் என்று வால்மீகி ராமாயண பாலகாண்ட 27-ஆம் அதிகாரத்தில் கூறப்பட்டுள்ளது.


விஸ்வாமித்திரருக்குத் தனிக் கோவில் தமிழ்நாட்டின் திருநெல்வேலி மாவட்டம்ராதாபுரம் வட்டம் விஜயாபதி  உள்ளது

அன்புடன் உலக மக்கள் அனைவரும் ஆனந்தமாய் வாழ வேண்டும்

ஸ்ரீ விஸ்வாமித்திரமகரிஷிக்கு பிரதி மாதம்  அனுஷம் நட்சத்திரதினத்தன்று சிறப்பு  அபிஷகம், புஷ்பாஞ்சலி ஆராதனை,அன்னதானம் நடைபெறும்   அனைவரும் கலந்து கொண்டு ஸ்ரீ விஸ்வாமித்திரமகரிஷி திருவருள் ஆசிர்வாதம் பெற்று செல்லுமாறு மானாமதுரை ஸ்ரீ மஹா பஞ்சமுக ப்ரத்யங்கிரா வேத தர்ம சேக்ஷத்ரா டிரஸ்ட்  சுவாமிஜி - மாதாஜி அன்புடன் அழைகின்றார்கள் 

மேலும் தகவல்கள்களுக்கு:   
98428 58236 
87540 16236
98420 78733

No comments:

Post a Comment