நாளை (15.08.2018 ) கருட பஞ்சமி! பகவான் எத்தனை அவதாரம் எடுத்தாலும் அதில் கருடனும் இருப்பார் என்கிறது புராணம். இப்படி எந்நேரமும் ஸ்ரீமந் நாராயணனை விட்டு பிரியாத கருடனை நாம் வணங்கினால் நிச்சயம் கருடனின் அருளாசி கிடைக்கும். முதலையின் வாயில் சிக்கிகொண்ட யானை, ’ஆதிமூலமே’ என்ற அலறிய போது, பெருமாள் அந்த யானையை காப்பாற்ற நினைத்தவுடன் அவரின் மனஓட்டத்தை புரிந்துக்கொண்டு பகவானை சுமந்து வேகமாக வந்து யானையை காப்பாற்ற உதவினார் கருடபகவான். அதனால்தான் பெருமாளை வணங்கும்போது அவருடைய வாகனமான கருடனுக்கும் விளக்கேற்றி வாசனை மலர்களை சமர்பித்து வணங்கினால் பெருமாளின் ஆசியும் கருடபகவானின் அனுகிரகமும் கிடைக்கும். நாளை (15.08.2018) நாக பஞ்சமி! பல வடஇந்தியர்கள் தங்கள் வீட்டில் நாகத்தின் படத்தை வைத்து தினமும் பூஜை செய்கிறார்கள். நாகம் ஆசி வழங்கினால்தான் யோகம் ஏற்படும் என்று ஆணிதரமாக நம்புகிறார்கள். இது உண்மையும் கூட. அத்துடன் நாக பஞ்சமி அல்லது நாகசதுர்த்தி அன்று நாகத்திற்கு பூஜைகள் செய்தால் நிச்சயம் நல்ல பலன் கிடைக்கும் – தோஷமும் நீங்கும். நாகவழிபாடு என்பது நம் இந்தியா முழுவதும் விசேஷம். கடவுளின் உருவம் தெரியாத காலத்திலேயே நாகம்தான் நம் தெய்வமாக இருந்தது. அதனால்தான் பிறகு நமது தெய்வங்களுடன் நாகமும் முக்கிய இடம் பெற்றது. அதனால் நாக பஞ்சமி அன்று உங்கள் வீட்டின் அருகே இருக்கும் ஆலயத்திற்கு சென்று நாகசிலைக்கு அபிஷேகம் செய்து மஞ்சள்-குங்குமம் வைத்து பூஜை செய்யுது வணங்கினால் தடைப்படும் காரியங்கள் எல்லாம் தடையில்லாமல் நடக்கும். நாகதோஷம், காலசர்ப்பதோஷம் எதுவானாலும் அவை நீங்கி, உன்னதமான வாழ்க்கை அமையும்

Wednesday, 25 May 2016

சித்தர்கள். மூலிகைகளில் தலைசிறந்த மூலிகை


சித்தர்கள். மூலிகைகளில் தலைசிறந்த மூலிகை







அம்மாவோ ஆறு சுவைகள் ஊட்டி, பிணியற்ற உடலை மட்டுமே தேற்றுவாள். அறுசுவையும் கொண்ட கடுக்காய், நோய் ஓட்டி உடல் தேற்றும். அப்படியானால் நோயைப் போக்கும் கடுக்காய்தானே தாயினும் சிறந்தது என்கிறார் அகத்திய சித்தர்.

மூலிகைகளில் தலைசிறந்த மூலிகை கடுக்காய். எண்ண முடியாத மருத்துவ குணங்கள் கொண்டது. இதைத் தேடி ஏழு கடல், ஏழு மலை தாண்டி எல்லாம் செல்ல வேண்டியதே இல்லை. எல்லா நாட்டு மருந்துக்கடைகளிலும் குறைந்த விலைக்கு கிடைக்கும் மூலிகைச்சரக்கு இது. ஒவ்வொரு வீட்டிலும் உப்பு சர்க்கரை மாதிரி வாங்கி வைத்திருக்க வேண்டிய பொருளும்கூட.

கடுக்காய் வகைகள் :

பிஞ்சு கடுக்காய்,
கருங்கடுக்காய்,
செங்கடுக்காய்,
வரிக்கடுக்காய்,
பால்கடுக்காய்
என, பல வகைகள் உண்டு. கிடைக்கும் இடத்தைப் பொறுத்து பெயர் மாறுபடும்.

இவை தவிர,
காபூல் கடுக்காய்,
சூரத் கடுக்காய்
எனும் வகைகளும் இங்கே கிடைக்கின்றன.

# பிஞ்சு கடுக்காய், மலச்சிக்கலுக்கு நிவாரணம் தரும்.

# கருங்கடுக்காய், மலத்தை இளக்குவதுடன் உடலுக்கு அழகும் மெருகும் தரும்.

# செங்கடுக்காய், காச நோயைப் போக்கி மெலிந்த உடலைத் தேற்றி அழகாக்கும்.

# வரிக்கடுக்காய், விந்தணுக்களை உயர்த்தி பலவித நோய்களையும் போக்கும்.

# பால் கடுக்காய், வயிற்று மந்தத்தைப் போக்கும்

என கடுக்காய் வகைகளின் பயனை அன்றே சித்தர்கள் சொல்லியுள்ளனர்.

கடுக்காயை
விஜயன்,
அரோகினி,
பிருதிவி,
அமிர்தமரிதகி,
த்ருவிருத்தி
என அதன் புறத்தோற்றத்தையும் மருத்துவக் குணத்தையும் கொண்டு் வகைப்படுத்தியுள்ளது சித்த ஆயுர்வேத மருந்துவங்கள்.

உச்சி முதல் பாதம் வரை பல நோய்களுக்கு கடுக்காய்ப்பொடி மருந்து.

மருந்தாக்குவதற்கு முன்பு கடுக்காயின் கொட்டையை நீக்க வேண்டியது முக்கியம்.

“கடுக்காய்க்கு அக நஞ்சு; சுக்குக்கு புற நஞ்சு”
என்கிறது சித்தர் பாடல். அதாவது சுக்கைப் பயன்படுத்துவதற்கு முன்பு, அதன் புறத்தோலை நீக்க வேண்டியது முக்கியம். அதேபோல் கடுக்காய்க்கு அதன் கொட்டையை நீக்கியே பயன்படுத்த வேண்டும்.

பசியின்மையைப் போக்கும் கடுக்காய் :

பசிக்கிறது, சாப்பிட முடியவில்லை என உணவின் மீது வெறுப்பு வரும் அரோசக நோய்க்கு, கடுக்காய் துவையல் சிறந்த மருந்து. கடுக்காயை கஷாயமாக்கி அருந்தினால், மலச்சிக்கல் பிரச்னை தீர்ந்து மலம் இளகும். சர்க்கரை நோய் இல்லாமலேயே அதிகமாக சிறுநீர் கழிக்கும் நோய்க்கும், இந்த துவையல் சிறந்த மருந்து.

ஒரு கடுக்காயின் தோலை பொடி செய்து தினமும் மாலை சாப்பிட, இளநரை மாறும். மூக்கிலிருந்து ரத்தம் கசியும் நோய்க்கு கடுக்காய்த்தூளை நசியமிட்டுச் சரியாக்கியுள்ளனர் சித்த மருத்துவர்கள். துவர்ப்புச் சுவைமிக்க கடுக்காய், மலமிளக்கும். அதே சமயம் ரத்தமாக கழிச்சல் ஆகும் சீதபேதிக்கும் மருந்தாகும் என்பது இன்றளவும் புரிந்துகொள்ள முடியாத மருத்துவ விந்தை. ஒரே பொருள் மலத்தை இளக்கவும், பேதியை நிறுத்தவும் பயன்படுவது தான் மூலிகையின் மகத்துவம். அதில் உள்ள பல்வேறு நுண்ணிய மருத்துவக் குணமுள்ள பொருட்கள் தேவைக்கேற்றபடி பயனாவது, இயற்கையின் நுணுக்கமான கட்டமைப்பு.

சர்க்கரையைக் குறைக்கும் கடுக்காய் :
கடுக்காயை உப்புடன் சாப்பிட்டால், கப நோய்களும், சர்க்கரையுடன் சாப்பிட்டால் பித்த நோயும், நெய்யுடன் சாப்பிட்டால் வாத நோயும், வெல்லத்துடன் சாப்பிட்டால் அத்தனை நோய்களும் அகலும்.

கல்லீரல் நோய் உள்ளவர்கள், அதற்கென வேறு எந்த மருத்துவம் எடுத்துக்கொண்டாலும் கடுக்காய் பொடியை நிலக்கடலை அளவு எடுத்து தண்ணீரில் கலந்து சாப்பிடுவது, கல்லீரலைத் தேற்றி காமாலை வராது காத்திடும்.

திரிபலா பெருமைகள் :

திரிபலா எனும் சித்த மருத்துவ மருந்தில் கடுக்காய், நெல்லிக்காய், தான்றிக்காய் என்னும் மும்மூர்த்திகளும் சேர்க்கப்படுகின்றன. இதில் கடுக்காய் பிரதானமானது. திரிபலா கூட்டணி இன்று, சர்க்கரை நோய்க்கும் மூலம், பவுத்திரம், குடல் அழற்சி நோய்களுக்கெல்லாம் பயனாவதை நவீன மருத்துவ அறிவியல் உறுதிப்படுத்தி இருக்கிறது. நோயாளிகள் இந்தக் கூட்டணி மருந்தை தினம் காலை மாலை உணவுக்கு முன்னதாக அரை தேக்கரண்டி சாப்பிட்டு வர, பிற மருந்துகளுக்கும் துணையாகும். சர்க்கரை நோயைக் கட்டுக்குள் வைத்திருக்க உதவும்.

புண்களைக் கழுவ இந்தத் திரிபலா சூரணத்தைப் பயன்படுத்தலாம். குறிப்பாக ஆறாத புண்களான சர்க்கரை நோய்ப் புண், வெரிகோஸ் நாள புண், படுக்கைப்புண் ஆகியவற்றைக் கழுவி சுத்தம் செய்ய, கடுக்காய் கலந்த இந்த திரிபலாசூரணம் நல்ல மருந்தாக இருக்கும். பல் ஈறுகளில் ரத்தம் கசிந்தாலோ, வாய்துர்நாற்றம் இருந்தாலோ, பல் சொத்தை இருந்தாலோ, திரிபலா பொடியை பற்பொடியாகப் பயன்படுத்த வேண்டும்.

எமன் அருகில் வராமல் இருக்க, காலை இஞ்சி, கடும்பகல் சுக்கு, மாலை கடுக்காய் அருந்தச் சொன்னார்கள் சித்தர்கள். எமன் வருவாரோ மாட்டாரோ, கொஞ்ச நோய்க் கூட்டம் நிச்சயம் வராது என்கிறது இதனை ஆய்ந்த மருத்துவ உலகம்.

No comments:

Post a Comment