நாளை (15.08.2018 ) கருட பஞ்சமி! பகவான் எத்தனை அவதாரம் எடுத்தாலும் அதில் கருடனும் இருப்பார் என்கிறது புராணம். இப்படி எந்நேரமும் ஸ்ரீமந் நாராயணனை விட்டு பிரியாத கருடனை நாம் வணங்கினால் நிச்சயம் கருடனின் அருளாசி கிடைக்கும். முதலையின் வாயில் சிக்கிகொண்ட யானை, ’ஆதிமூலமே’ என்ற அலறிய போது, பெருமாள் அந்த யானையை காப்பாற்ற நினைத்தவுடன் அவரின் மனஓட்டத்தை புரிந்துக்கொண்டு பகவானை சுமந்து வேகமாக வந்து யானையை காப்பாற்ற உதவினார் கருடபகவான். அதனால்தான் பெருமாளை வணங்கும்போது அவருடைய வாகனமான கருடனுக்கும் விளக்கேற்றி வாசனை மலர்களை சமர்பித்து வணங்கினால் பெருமாளின் ஆசியும் கருடபகவானின் அனுகிரகமும் கிடைக்கும். நாளை (15.08.2018) நாக பஞ்சமி! பல வடஇந்தியர்கள் தங்கள் வீட்டில் நாகத்தின் படத்தை வைத்து தினமும் பூஜை செய்கிறார்கள். நாகம் ஆசி வழங்கினால்தான் யோகம் ஏற்படும் என்று ஆணிதரமாக நம்புகிறார்கள். இது உண்மையும் கூட. அத்துடன் நாக பஞ்சமி அல்லது நாகசதுர்த்தி அன்று நாகத்திற்கு பூஜைகள் செய்தால் நிச்சயம் நல்ல பலன் கிடைக்கும் – தோஷமும் நீங்கும். நாகவழிபாடு என்பது நம் இந்தியா முழுவதும் விசேஷம். கடவுளின் உருவம் தெரியாத காலத்திலேயே நாகம்தான் நம் தெய்வமாக இருந்தது. அதனால்தான் பிறகு நமது தெய்வங்களுடன் நாகமும் முக்கிய இடம் பெற்றது. அதனால் நாக பஞ்சமி அன்று உங்கள் வீட்டின் அருகே இருக்கும் ஆலயத்திற்கு சென்று நாகசிலைக்கு அபிஷேகம் செய்து மஞ்சள்-குங்குமம் வைத்து பூஜை செய்யுது வணங்கினால் தடைப்படும் காரியங்கள் எல்லாம் தடையில்லாமல் நடக்கும். நாகதோஷம், காலசர்ப்பதோஷம் எதுவானாலும் அவை நீங்கி, உன்னதமான வாழ்க்கை அமையும்

Tuesday, 31 May 2016

பாலா திரிபுர சுந்தரி - வாலைக் குமரி

பாலா திரிபுர சுந்தரி - வாலைக் குமரி




பாலை என்னும் பாலா திரிபுரசுந்தரி ஆராதனை தேவி வழிபாட்டில் முதற்படி என்பர். 
ஸ்ரீ வித்யையில் "பாலா" மந்திரத்துடன் பெரும்பாலோர் நின்றுவிடுவது வழக்கம். இதனால் தானோ என்னவோ இம்மந்திரத்திற்கு "லகு ஸ்ரீ வித்யா" என்றே பெயர் இருக்கிறது. அன்னையை இந்த ரூபத்தில் ஆராதிக்க என்றே தனியாக கட்கமலா மற்றும் ஆவரண பூஜைகள் எல்லாம் இருக்கிறது. குண்டலினி யோகத்தில் முதல் இரு ஆதார சக்ரங்களில் அம்பிகையை பாலையாக பூஜிக்கச் சொல்லப்பட்டிருக்கிறது.


அம்பிகையின் 9 வயது ரூபமே பாலா திரிபுர சுந்தரி என்பர். ஆனால் லலிதோபாக்யானத்தில் பாலா என்னும் சக்தி அன்னையின் ப்ரியத்தை பரிபூரணமாகப் பெற்ற தனி சக்தியாகவே கூறுவர். பாலாம்பிகையின் அனுக்ரஹம் கிடைத்தால், பராம்பிகை அனுக்ரஹம் சுலபமாகுமாம்.


ஒரு முறை குபேரன் அம்பிகையை பூஜிக்கையில், 'நித்ய யெளவனா' என்ற நாமாவைச் சொன்னபோது அன்னையைக் கூர்ந்து நோக்கினானாம். அதாவது, தன்னை மறந்து, தான் செய்யும் பூஜையை மறந்து அன்னையின் பிம்பத்தினை தன் கண்களிலிருந்து மறைத்து அகக்கண்களில் அன்னையை கன்னியாக, குமரியாகக் காண தலைப்படுகிறான். உபமானங்களூக்கு அப்பாற்பட்ட அவளை மனக்கண் முன் கொண்டுவர இயலவில்லையாம். அப்போது ஈசன் அவன் முன் தோன்றி, பாலாவாக அன்னையைப் பார்க்க வேண்டுமானால் உஷத்காலத்தில் த்ரிஸாகர சங்கமத்தில், பாரதத்தின் தென் மூலையில் காணலாம் என்றாராம். அதே கன்யாகுமாரி கோவில் கொண்ட இடம் என்று கூறிக் கேட்டிருக்கிறேன். லலிதா சஹஸ்ரநாமத்தில் உள்ள "தாரா காந்தி திரஸ்காரி நாஸாபரண பாஸுரா" என்னும் நாமம் இந்த குமரியம்மனுக்கே உரியதோ என்று தோன்றுகிறது. இந்த நாமத்தின் பொருள், நக்ஷத்திரத்தை விட அதிக ஒளிதரும் மூக்குத்தியை அணிந்தவள் என்பது. இந்த மூக்குத்தியே ஒரு சமயத்தில் கலங்கரை விளக்காக தடுமாறிய மாலுமிக்கு வழிகாட்டியது என்பர். இங்கே அம்பிகையை பிரதிஷ்ட்டை செய்தவர் பரசுராமர் என்று கூறப்படுகிறது. பாலாவிற்கு இன்னும் சில கோவில்களில் தனி சன்னதி உண்டு, அவை திருமுதுகுன்றம் எனப்படும் விருத்தாசலம், திருக்கடையூர், சென்னை கொத்தவால் சாவடி கன்னிகா பரமேஸ்வரி போன்றவை உடனடியாக நினைவுக்கு வருகிறது.


சித்தர்கள் சிலரும் இந்த அன்னையை பலவாறாகப் பாடியுள்ளனர். திருமூலர் தனது திருமந்திரத்தில்,


சக்தி என்பாள் ஒரு சாதகப் பெண் பிள்ளை (1199)
முக்திக்கும் நாயகி என்பதை அறிகிலர்


ஓங்காரி என்பாள் அவள் ஒரு பெண் பிள்ளை (1073)
நீங்காத பச்சை நிறம் உடையவள்
ஆங்காரியாகிய ஐவரை பெற்றிட்டு
ஹ்ரீங்காரத்துள்ளே இனித்திருந்தானே

என்பதாக கூறியிருக்கிறார். கருவூரார் கூறுகையில்,

ஆதியந்தம் வாலையவள் இருந்த வீடே
ஆச்சர்யம் மெத்த மெத்த அதுதான் பாரு


என்று அன்னையை வாலைப் பெண்ணாக வைத்து அவளது மாயை போன்ற கூறுகளைப் பற்றிக் கூறுகிறார். இவர் போன்றே கொங்கண சித்தர் பாடியது வாலைக்கும்மி என்னும் பாடல் தொகுப்பு. அதிலிருந்து ஒரு பாடலைப் பார்க்கலாம்.



முக்கோண வட்ட கிணற்றுக்குள்ளே மூல
மண்டல வாசிப் பழக்கத்திலே
அக்கோண வட்டச் சக்கரத் திக்வாலை
அமர்ந் திருக்கிறாள் வாலைப் பெண்ணே (54)

காலனை காலால் உதைத்தவளாம் வாலை
ஆலகால விடம் உண்டவளாம்
மாளாச் செகத்தைப் படைத்தவள் இந்த
மானுடன் கோட்டை பிடித்தவளாம் (57)


இடுகையின் ஆரம்பத்தில் சொல்லியது போல, ஸ்ரீவித்யைக்கு முதல் படியான பாலா திரிபுர சுந்தரிக்கான தியான ஸ்லோகத்தின் பொருளாவது; சிவந்த நிறமுடைய கிரணங்களின் கூட்டங்களால் நிரம்பிய எல்லாத் திக்குகளையும் உடையவளும், இரு கைகளிலே ஜபத்திற்கான மாலையையும், புத்தகத்தையும் ஏந்தியும், மற்ற இரு கரங்கள் அபய-வரத முத்திரைகளுடனும், செந்தாமரையில் அமர்ந்து நிரந்தரமான ஸுகத்தை தருபவள் என் ஹ்ருதயத்தில் வசிக்கட்டும்.




அன்னையின் மேல் வலது கையில் ஜப மாலையும், மேல் இடது கையில் புஸ்தகத்தையும், கீழ் இடது-வலது முறையே அபய, வரத முத்திரைகளும் கொண்டதாக பாவிக்க வேண்டும். குழந்தைகள் இந்த அன்னையை வணங்கச் சொல்லிக் கொடுப்பதன் மூலம் அவர்களது கல்வி செழிப்புறும் என்பர்.

No comments:

Post a Comment