நாளை (15.08.2018 ) கருட பஞ்சமி! பகவான் எத்தனை அவதாரம் எடுத்தாலும் அதில் கருடனும் இருப்பார் என்கிறது புராணம். இப்படி எந்நேரமும் ஸ்ரீமந் நாராயணனை விட்டு பிரியாத கருடனை நாம் வணங்கினால் நிச்சயம் கருடனின் அருளாசி கிடைக்கும். முதலையின் வாயில் சிக்கிகொண்ட யானை, ’ஆதிமூலமே’ என்ற அலறிய போது, பெருமாள் அந்த யானையை காப்பாற்ற நினைத்தவுடன் அவரின் மனஓட்டத்தை புரிந்துக்கொண்டு பகவானை சுமந்து வேகமாக வந்து யானையை காப்பாற்ற உதவினார் கருடபகவான். அதனால்தான் பெருமாளை வணங்கும்போது அவருடைய வாகனமான கருடனுக்கும் விளக்கேற்றி வாசனை மலர்களை சமர்பித்து வணங்கினால் பெருமாளின் ஆசியும் கருடபகவானின் அனுகிரகமும் கிடைக்கும். நாளை (15.08.2018) நாக பஞ்சமி! பல வடஇந்தியர்கள் தங்கள் வீட்டில் நாகத்தின் படத்தை வைத்து தினமும் பூஜை செய்கிறார்கள். நாகம் ஆசி வழங்கினால்தான் யோகம் ஏற்படும் என்று ஆணிதரமாக நம்புகிறார்கள். இது உண்மையும் கூட. அத்துடன் நாக பஞ்சமி அல்லது நாகசதுர்த்தி அன்று நாகத்திற்கு பூஜைகள் செய்தால் நிச்சயம் நல்ல பலன் கிடைக்கும் – தோஷமும் நீங்கும். நாகவழிபாடு என்பது நம் இந்தியா முழுவதும் விசேஷம். கடவுளின் உருவம் தெரியாத காலத்திலேயே நாகம்தான் நம் தெய்வமாக இருந்தது. அதனால்தான் பிறகு நமது தெய்வங்களுடன் நாகமும் முக்கிய இடம் பெற்றது. அதனால் நாக பஞ்சமி அன்று உங்கள் வீட்டின் அருகே இருக்கும் ஆலயத்திற்கு சென்று நாகசிலைக்கு அபிஷேகம் செய்து மஞ்சள்-குங்குமம் வைத்து பூஜை செய்யுது வணங்கினால் தடைப்படும் காரியங்கள் எல்லாம் தடையில்லாமல் நடக்கும். நாகதோஷம், காலசர்ப்பதோஷம் எதுவானாலும் அவை நீங்கி, உன்னதமான வாழ்க்கை அமையும்

Thursday, 12 November 2015

கொடிமரம் எதனைக் குறிக்கிறது?


கொடிமரம் எதனைக் குறிக்கிறது?

உயிர் பாசத்தை விட்டு இறைவனை அடைவதைக் குறிப்பது கொடிமரம்.

கோயிலுக்கு கொடிமரம் அமைப்பது ஏன்?

கோயிலுக்கு அழகு தருவது கொடிமரம். தீய சக்திகளை அகற்றுவதன் பொருட்டும், இறை ஆற்றலை அதிகரித்தல் பொருட்டும், கோயிலையும் பக்தர்களையும் பாதுகாத்தற் பொருட்டும் ஆலயங்களுக்கு முன்பாக கொடிமரம் நிறுவப்படுகிறது.


கொடி மரத்தின் தண்டு நல்ல வைரம் பாய்ந்ததாக இருக்க வேண்டும். சந்தனம், தேவதாரு, செண்பகம், வில்வம், மகிழம் முதலிய மரங்களில் கொடிமரம் செய்வது உத்தமம் ஆகும். பலா, மா ஆகிய மரங்களில் கொடிமரம் அமைப்பது குறைந்த நன்மையைத் தருவதால் மத்திமம் ஆகும். கமுகு, பனை, தெங்கு முதலிய மரங்களில் கொடி மரம் அமைப்பது மிகமிகக் குறைந்த நன்மையளிக்குமாதலால் இவை அதமம் ஆகும். கொடி மரம் முப்பத்து மூன்று கணுக்கள் உள்ளதாய் அமைப்பது மிகவும் சிறப்பாகும்.
கொடிக்கம்பத்தின் ஐந்தில் ஒரு பாகம் பூமியிலிருக்கும்படி நடுவர். இதன் அடியிலிருந்து உச்சிவரை ஏழு பாகமாக்கி சதுர, கோண விருத்த வடிவங்களில் அமைப்பர். கொடிமரத்தின் அடிப்பாகம் சதுரமாக இருக்கும். இது இறைவனின் படைப்புத் தொழிலை உணர்த்துகிறது. இது பிரம்ம பாகமாகும். அதன் மேலுள்ள பாகம் எண்கோணமாயிருக்கும். இது இறைவனின் காத்தல் தொழிலைக் குறிக்கும். இது விஷ்ணு பாகமாகும். அதற்கு மேல் உருண்ட நீண்ட பாகம் உருத்திரனைக் குறிக்கும். இது இறைவனின் சங்காரத் தொழிலைக் குறிக்கும். ஆகவே கொடி மரம் என்பது மும்மூர்த்திகளின் முத்தொழில்களையும் உணர்த்துவதாக அமையப்பெற்றது.

கொடிமரமும் - மனிதனும்

கொடிமரம் மனித உடலில் முதுகெலும்பின் செயல்பாட்டினை விளக்குவம்.கொடிமரம் மனிதனுடைய முதுகு தண்டிற்கு ஒப்பானதாக விளங்குகிறது.கொடிமரத்தில் இருக்கும் ஒவ்வொரு அடுக்கும் அல்லது தட்டும் மனிதனின் முதுகிலுள்ள இணைப்பை குறிப்பிடுகின்றன. கொடிமரத்திலுள்ள உச்சி பகுதியில் அமைந்திருக்கின்ற மூன்று நிலைகள் மனிதனின் மூவித மூளைகளைப் பற்றி விளக்குகின்றன. அவை பெருமூளை (Cerebrum).மத்திய மூளை (Midbrain), கீழ்மூளை (Cerebellum) ஆகியவை.கொடிமரத்தின் முதல் நிலை பெருமூளையின் முன் பகுதி:-பேச்சினை இயக்குவது, இதன் ஒத்துழைப்போடு எண்ணங்கள்,உணர்ச்சி மற்றும் செயல் திறனை கட்டுப் பாட்டில் வைதிருக்கும் இடமாக இப்பகுதி காணப்படுகின்றது.மேற்பகுதி உடலியல் உணர்வாகிய அறிதல்,தொடுதல்,அழுத்தம், தட்ப வெட்பம் மற்றும் வலியை அறிந்த பின் பொருள் மாற்றம் செய்யும் இடமாக அமைகின்றது. பக்கப் பகுதி. ஒலியை நினைவு கூர்தல்,இதன் நாதமும் ஓசையின் வேகமும் இப்பகுதியில் இடம் பெறுகின்றன.இப்பகுதியில் அமைந்திருக்கும் பிளவு நினைவுகளை சேமிக்கும் கிடங்காக முக்கிய பங்காற்றுகின்றது. பின் பகுதி:- இவ்விடம் கண்டுபிடித்தல் மற்றும் காணும் காட்சியை பொருள் மாற்றம் அல்லது விளக்கம் செய்வது. கொடிமரத்தின் நடு நிலை மத்திய மூளையை குறிக்கின்றது. மத்திய மூளையின் ஆளுமை புறநடவடிக்கையுடனும் இதன் எல்லை வட்டார தொடர்புடைய உறுப்புக்களின் வெளியுறையுடனும் தகவல் தொடர்பு நிலையத்துடனும் (Thalamus) இணைகின்றது. கொடிமரத்தின் கீழ் நிலை இரண்டாவது பெருமூளை எனும் கீழ் மூளையை குறிக்கின்றது. இதன் நரம்புத் தொடர்புகள் மூளையின் மற்ற வட்டார இணைப்புடன் இணைகின்றது. முதுகு தண்டின் நரம்பு கற்றை எளிதாக வழவழப்புடனும் துல்லியதமாக இயங்குவதற்கு சமநிலை கட்டுப் பாட்டில் அமைந்திருக்கும். திருவிழாக் காலங்களில் கொடிமரத்தின் கயிறு உச்சி ஏறி தொடுவதைப் போல அமைந்திருக்குமானது உடலிலுள்ள நரம்பு கற்றைகள் அனைத்தும் முதுகு தண்டு வழியாக செல்வது போல் உள் மற்றும் வெளி உணர்வுகளின் செயல்பாட்டின் தொடர்புகளை மூளைக்கு அனுப்பி வைக்கும் செயலை கொடிமரத்தில் காண்பிக்கப் படுகின்றன.நரம்பு கற்றைகள் அனைத்தும் உடலில் பல பாகங்களுக்கு இணைக்கப் பட்டு நரம்பு வழியாக தகவல் தொடர்பினை பெறப்பட்டு இதன் வாயிலாக உள் மற்றும் புற சூழ்நிலைக் கேற்றவாறு மூளைக்கு தகவல் அனுப்புவதும் பெறுவதுமாக அமைகின்றது.


ஆலயங்களில் கொடியேற்றுவது என்பது ஆகம விதிப்படி நடைபெறுவதாகும்.

கொடிமரம் சிவபெருமான்; கொடிக்கயிறு திருவருட் சக்தி; கொடித்துணி ஆன்மா; தர்ப்பைக் கயிறு பாசம் எனப்படும். கொடியேற்றும் நிகழ்ச்சியானது மும்மல வயப்படும் ஆன்மா, திருவருட்சக்தியினாலே பாசம் அற்று, சிவஞான வடிவமாகிய பதியின் திருவடியை அடைதல் என்னும் தத்துவத்தை உணர்த்துவதாகும். கொடி மரத்தின் பீடம் பத்ரபீடம் எனப்படும். இங்கே இறைவனிடம் பாசக்கட்டு அறுமாறு மனத்தைப் பலியிட வேண்டும் என்பதற்காக ஆன்மாவைப் பாசக்கயிறு சுற்றியுள்ளதை நினைவூட்டும் வகையில் கொடி மரத்தில் கயிறு சுற்றியிருக்கும். திருவிழாவில் முதல்நாள் கொடியேற்றுவதன் நோக்கமாவது திருவிழாவிற்கு வரும் அடியார்களை உயர்பதமடையச் செய்வதற்காக இறைவன் இவ்விழா நாட்களில் சிறப்பாக எழுந்தருளி அருள்பாலிக்கப் போகிறார் என்பதே. இறைவனை அடைந்தவர் அழிவற்ற ஆனந்த வெள்ளத்தில் நிலைத்திருப்பர் என நினைந்து கொடி மரத்தை சூக்கும லிங்கமாக எண்ணி வணங்க வேண்டும். இறைவனின் மூல மந்திரத்தை உச்சரித்த வண்ணம் கொடிமரத்தை மூன்று முறை வலம் வந்து வணங்க வேண்டும்.

சிவன் கோயிலில் நந்தியையும், பெருமாள் கோயிலில் கருடனையும், அம்பாள் கோயிலில் சிங்கத்தையும், முருகன் கோயிலில் மயிலையும், விநாயகர் கோயிலில் மூஞ்சுறுவையும், சாஸ்தா கோயிலில் குதிரையையும் கொடி மரத்தின் மேல்பகுதியில் அமைத்திருப்பார்கள்.

துவஜஸ்தம்பம் எனப்படும் கொடிமரத்தில் திருவிழாவின் முதல்நாள் கொடியேற்றுவது துவஜாரோகணம் என்றும், விழா முடிந்து கடைசி நாள் கொடியிறக்குவது துவஜாவரோகணம் என்றும் அழைக்கப்படுகிறது. கொடிமரத்தின் முன் ஆண்கள் அஷ்டாங்க நமஸ்காரமும், பெண்கள் பஞ்சாங்க நமஸ்காரமும் செய்தல் வேண்டும். கொடி மரத்தைக் காக்கும் பொருட்டு பித்தளை, செம்பு போன்ற உலோகங்களால் கவசமணிவிப்பர். இதனால் வெயில், மழை போன்ற இயற்கை மாற்றங்களிலிருந்து கொடி மரம் காக்கப்படுகிறது.

கொடிமரம் எதற்காக?

கோயில் வழிபாட்டில் மூலவரை வணங்கியபின், பிரகாரத்தை வலம் வந்து கொடிமரத்தில் சாஷ்டாங்க நமஸ்காரம் செய்வர். இதை ஏன் செய்கிறோம் என்று தெரிந்து கொண்டால் இதன் மகத்துவம் புரியும். வழிபாட்டிற்குச் செல்லும்போது மனம், உடல் தூய்மையாக இருக்க வேண்டும். வீடு, பணிச் சிந்தனைகளை மறந்து ஒருமித்த கருத்துடன் கோயிலில் நுழையவேண்டும். பலிபீடம் அருகே நின்று நான், எனது என்ற எண்ணத்தை மானசீகமாக விடுக்க வேண்டும். சந்நிதிக்குள் செல்லும் போது மனித உடம்பு ஒரு நடமாடும் பேட்டரியாக(மின்கலம்) மாறி விடும். மின்காந்தசக்தி பேட்டரியில் சேர்வது போல, கருவறையில் உள்ள தெய்வீகசக்தி உடம்புக்குள் குவியும். பிரகாரம் சுற்றி கொடிமரம் முன்பு சாஷ்டாங்க நமஸ்காரம் செய்யும் போது, உடலுக்கு தேவையான ஆற்றல் போக, உடலில் இருக்கும் அதிகப் படியான ஆற்றல் பூமிக்குள் இறங்கி விடும். அது கொடிமரம் வழியாக மேலேறி பிரபஞ்ச சக்தியோடு (உலக சக்தி) இணையும். அதனால், தூயமனதோடு ஒருவர் கோயிலில் வழிபட்டால் போதும். அதன் பயன் மக்களுக்கெல்லாம் கிடைக்கும். இதற்காகவே, கோயிலுக்குள் கொடிமரம் தவிர, மற்ற இடங்களில் சாஷ்டாங்க நமஸ்காரம் செய்யக்கூடாது என்று வலியுறுத்துகின்றனர்.

No comments:

Post a Comment